அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத் தென்றனைப் போதவிட் டானைப்
பகலிடத் துமிர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே
அகலிடத்தார் மெய்யை – அகலிடம் ஆகிய இவ்வுலகத்து உயிர்களின் உள்ளிருக்கும் உண்மைப் பரம்பொருளை.
உயிர் என்பது என்ன? அது உடலில் எங்கு உள்ளது? நம் உடலில் உயிராக, பிராண சக்தியாக விளங்குபவன் இறைவனே. உயிர்ச் சக்தி நம் உடலில் பாயும் வரையே நாம் மனிதர். இல்லையென்றால் நைட்ரஜனும் கால்சியமும் ஹைட்ரஜனும் கலந்த கல்லுக்கும், நமக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
அண்டத்து வித்தை – பரந்து விரிந்து கொண்டிருக்கும், பிரபஞ்சத்தை தன்னிடமிருந்தே தோற்றுவித்தவன்.
இந்த பிரபஞ்சத்தை எடுத்துக் கொள்வோம். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் என்று அனைத்தையும் தோற்றுவித்து, அவற்றை அந்தரத்திலே நிறுத்தி இயக்கிக் கொண்டிருப்பவனும் இறைவனே.
புகலிடத்து என்றனைப் போத விட்டானை – என்னை என் இருப்பிடத்திற்கே மீண்டும் சேர்த்தவனை
எல்லா உயிர்களும் மாயையின் பிடியால், பல பிறவிகளை எடுக்கின்றன. ஆனால் திருமூலருக்கு உடம்பை அழியாமல் காக்கும் இரகசியத்தையும், பிறப்பு இறப்பற்ற துரிய நிலையும் தந்து அடைக்கலம் அளித்தவன் இறைவன்.
பகலிடத்தும் இரவும் பணிந்தேத்தி – நேரம் காலமெல்லாம் கடந்து பணிந்து வணங்கி
திருமூலர் ஓராண்டு தவம் செய்து ஒரு பாடலை அளித்து, 3000 ஆண்டுகள் அருந்தவத்தால் திருமந்திரத்தை அருளியுள்ளார். எனவே அவர் பகல் இரவு என்று பாராது இறை உணர்வோடு வாழ்ந்தவர் என்பதை உணரலாம். வழிபாடு என்பது தினமும் காலை அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ செய்யப்பட வேண்டிய கடமை அல்ல. அதுவே வாழ்க்கை முறையாக வேண்டும்.
இகலிடத்தே இருள் நீங்கி நின்றேனே – இப்புவியிலேயே அறியாமை இருள் நீங்கி இருக்கிறேன்.
இப்பாடலின் மறை பொருள் பின்வருமாறு.
இப்பிரபஞ்சத்தின் சக்தியாகவும், நம் உடலில் குண்டலினி சக்தியாகவும் விளங்கும் இறைவனை, இடகலை, பிங்கலை வழியே செல்லும் பிராணனை சுழுமுனை மார்க்கமாக மேலெழுப்ப, புருவமத்தியில் அருட்பெருஞ்சோதி தோன்றி அறியாமை இருளை அழிக்கும் என்பதேயாகும்.